ஏன் தமிழ் கற்க வேண்டும் ? (பகுதி 1)

குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்புவார்கள். அந்த இனிமையை சற்றும் குறைக்காமல் தருவது நம் தாய்மொழியான "தமிழ்" என்றால் அது மிகையாகாது.

    த- வல்லினம்

    மி- மெல்லினம்

    ழ்- இடையினம்

பாட்டுக்கொரு பாரதி புலவர்,

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் இனிமையான மொழி எங்கும் காணேம்" என்றும்

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்திடடி பாப்பா" என்றும் பாடினார்.

பாரதியாரை தன் குருவாக ஏற்றுக்கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், 

"தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" 

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"

என்றும் சங்கநாதம் செய்தார்.

கம்பராமாயணத்தில் இராமன் அகத்தியரை சந்தித்த போது 

"தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்" என்றும் இராமனுக்கு வாழ்த்துக்கூறினார் அகத்தியர்.

தமிழில் பக்தி இலக்கியங்கள் ஏராளம். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்" ஞானசம்பந்தன் என்றொரு அடி திருஞானசம்பந்தர் நாள்தோறும் இசையால் இனிமைத் தமிழ் பரப்பினார் என்பதாம்.

திருப்பாவை இயற்றிய ஆண்டாள் முப்பதாவது பாசுரத்தில் "சங்கத் தமிழ் மாலை" முப்பதும் தப்பாமே" என்று பாடியுள்ளார்.

சேர , சோழ, பஆண்டிய மன்னர்கள் முத்தமிழையும் மூன்று சங்கங்கள் மூலம் வளர்த்தனர்.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முந்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி" !

இப்படி பட்ட நம் தமிழ் மொழியை நாம் கற்பதில் பெருமை கொள்வோம்.

 

தமிழ் வாழ்க!

Comments